Sunday, 10 March 2013

நிறை செல்வம்! (Wealth in adequacy)


சுப்பு என்பவர் ஓர் பெரிய செல்வந்தர்.ஆனால் அந்த ஊரில் அவரைக்  கருமி என்றே எல்லோரும் அழைத்தனர்.அதற்குக்  காரணமும் இருந்தது.அவர் பள்ளியில் படித்த போது ஒருமுறை  "கஞ்சன்" என அவரது வாத்தியார் எழுதச் சொன்னார்.'கஞ்சன்' என்றால் நான்கு எழுத்து எழுத வேண்டுமே!, அதே அர்த்தமுள்ள "கருமி" என்ற மூன்றெழுத்தே போதுமென எழுதியவர்தான் சுப்பு.
அன்றிலிருந்து சுப்புவைக்  கருமி என்றே ஊர்மக்கள் அழைத்தனர். 
எப்போதும் கிழிந்த சட்டை அணிந்து செல்வது சுப்புவின் வழக்கம்.ஒருமுறை உறவினர் ஒருவர் அவரிடம்  "செல்வந்தராகிய  நீங்கள், ஏன் கிழிந்த சட்டையுடன் அலைகிறீர்கள்?" என்று கேட்டதற்கு, "என்னைப்  பற்றித்தான் இந்த ஊரில் எல்லோருக்கும் தெரியுமே!, கிழிந்த  சட்டை போட்டால் என்ன? " என்று கிண்டலாகப்  பதில் சொன்னார் சுப்பு.
இன்னொரு நாள் பட்டணத்தில் சுப்புவைப் பார்த்த வேறொரு நபர் அதே கேள்வியைக்  கேட்டதற்குச் சுப்புவும் "என்னைப்  பற்றி இங்கே யாருக்கும் தெரியாதே!,கிழிந்த சட்டையை நான் ஏன் போடக்கூடாது?" என்று சாமர்த்தியமாகப் பதில் அளித்தார்.
செலவு செய்யாமல் செல்வம் சேர்ப்பதில் சுப்பு பெரிய கில்லாடி.தனது கல்யாணத்திற்குச்  செலவே செய்யாமல் மண்டபமோ விருந்தோ ஏற்பாடு செய்யாமல் நடத்தி அசத்தியவர். இப்படிப் பட்டவருக்கு அருளே வடிவான மனைவி வந்து வாய்த்தாள்.தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தைத், தன்  குடும்பத்திற்குக்  கூடச் செலவு செய்யாமல் கருமித்தனமாகச் சேமித்து வைத்திருந்த சுப்புக்கு  இளமையிலேயே  நோயும் முதுமையும் அழைக்காமலேயே தேடி  வந்தது.
அவரது மனைவி புத்திகூர்மையுடையவள்.கணவரை அனுசரித்து நடந்து
கொள்பவள்.ஆனால் பண விசயத்தில் சுப்புவிற்கு நேரெதிராகவே செயற்பட்டு வந்தாள்.
உதவி கேட்டு வருவோருக்கு இல்லையென்று சொல்லாமல்
இருப்பதைக் கொடுக்கும் சுவாபம் உள்ளவள்.
சுப்புவிற்கு அவளின் தயாள குணமும் இல்லாதவர்களிடம் அவள் காட்டும்பரிவும் அறவே பிடிப்பதில்லை.
சுப்புவிற்குத்  தீராத நோய் வந்தபோது கண்ணும் கருத்துமாய் அவரைக்
கவனித்துக்கொண்டாள். அவர் இறப்பதற்குச் சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து “நான் இறந்துவிட்டபின்பு  நான் சம்பாதித்த பணம் முழுவதையும்  என் கூடவே எடுத்துச்  செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு” என்றார். தான் சம்பாதித்த பணம் முழுவதையும் ஏழைகளுக்குத்  தானமாகக் கொடுத்துவிடுவாளோ என்ற பயம்தான் இதற்குக் காரணம். பணம் முழுவதையும் சவப் பெட்டிக்குள் வைக்கவேண்டும் என 
உறுதிமொழியும் வாங்கிக் கொண்டார். கணவனின் கடைசி ஆசையை  நிறைவேற்றுவதுதானே  மனைவியின் கடமை?. 
நோயின் தீவீரத்தால் சுப்பு விரைவிலேயே இறந்துபோனார். சவத்தை அடக்கம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் நடந்தேறின. சவப்பெட்டியை மூடுந் தறுவாயில் அந்தப் புத்திசாலி மனைவி, “கொஞ்சம் பொறுங்கள்  எனக் கூறியவண்ணம் அறைக்குள்ளே ஓடிச்சென்று  ஒரு துணிப் பையை எடுத்து வந்து சவப் பெட்டிக்குள்  வைத்தாள்.
அவளுடைய கடினமான வாழ்வையும் சுப்புவின்  கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவளது  தோழி “நீயும் முட்டாள்தனமாகச்  சுப்பு சொன்னது போலவே  செய்து விட்டாயா?” என்று கேட்டாள்.அதற்கு சுப்புவின் மனைவி,”அவரிடம்  சவப்பெட்டியினுள் முழுப் பணத்தையும் வைப்பதாக உறுதிமொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும்?.

அவரது  சேமிப்புகள்  சொத்துக்கள்   அனைத்தையும் பணமாக்கி என்னுடைய
வங்கிக் கணக்கிலே போட்டு விட்டேன்.வங்கியில் உள்ள முழுத்தொகைக்கும் காசோலை ஒன்றை  எழுதி அதைத் துணிப்பைக் குள்ளே இட்டுச் சவப் பெட்டியில் வைத்து விட்டேன்.அவர் போகும்  இடத்தில் காசோலையை மாற்றி  எடுத்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை”என்றாள்."அந்தப் பணத்தை உயிருடன் இருக்கும்போதே சுப்பு அனுபவிக்கவில்லை, இறந்தபின் அந்தப் பணம் அவருக்கு  உதவும் என்றா நினைக்கிறாய்?" என்றாள்.
தொண்டுள்ளம் கொண்ட சுப்புவின் மனைவி  கணவன் விட்டுச் சென்ற சொத்து அனைத்தையும் ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து உதவுவதற்கும்  தான தருமங்கள் செய்வதற்கும்  பயன்படுத்தினாள்.
அதே நேரத்தில் செல்வத்தை நல்வழியில் ஈட்டும் பணியிலும் ஈடுபட்டாள். 
சுப்புவைப்போல்  உடலை வருத்தித்  தேவைக்கு அதிகமாய்ப் பொருள் சேர்த்துச்  செல்வந்தர் போல் வலம் வருவோர்  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறார்கள்.செல்வம்மட்டுமே வாழ்க்கையல்ல என வேதாத்திரி மகரிஷி விளக்கும்போது, 
"இக்காலத்தில் ஒரு சிலர் செல்வந்தர்களாகவும்,மிகப் பலர் ஏழைகளாகவும் 
இருப்பதனால் செல்வத்திற்கு மதிப்பு இருக்கிறது.
எல்லோரும் செல்வந்தர்களாகிவிட்டால் செல்வத்திற்கு மதிப்பு எப்படி ஏற்படும்?..நீங்கள் எவ்வளவோ செல்வங்களைச் சேகரித்து
வைத்து இருக்கிறீர்கள்.உங்கள் எதிர்கால வாழ்வைப் பற்றி உறுதியாகவும் 
கவலையற்றும் இருக்க முடிகிறதா?ஏன் முடியவில்லை?எப்படி முடியும்?
நீங்களும் மனிதர்கள்தானே ! எண்ணிறைந்த மக்கள் வறுமையின் காரணமாக
எண்ணங்களைச் சிதறவிட்டு வருந்திக் கொண்டிருக்கும்போது அவர்கள் 
எல்லோருடைய  வாழ்க்கைப் போராட்டக் கவலைகள் உலகில் யாரைத்தான்
நிம்மதியாக,அமைதியாக இருக்கச் செய்யும்?இந்த உண்மையை உங்கள் அறிவிலே பதித்துக் கொள்ளுங்கள்.
உலகில் மனிதனாகப் பிறந்தவர்களில்  ஒருவன் கூட வறுமையில் வாடினாலும்
மனித இனத்தின் வாழ்வில் அமைதி ஏற்படாது.உலகில் பொருளாதாரத்துறையில் மாறுதலை ஏற்படுத்தச் செல்வந்தர்களிடமிருந்து
பணத்தையும் சொத்துகளையும் பிடுங்கி அனைவருக்கும் பங்கு போட்டு
கொடுத்துவிட வேண்டியதில்லை.அப்படிச் செய்வது தவறான பாதையாகும்.
செல்வந்தர்களாக இருப்பவர்களும் மனிதர்கள்தான்.அவர்கள் மனம் வருந்தவும், அவர்களின் எதிர்கால வாழ்வில் துன்பங்கள் அதிகரிக்கவும் செய்வது மனித தர்மத்திற்கு ஏற்றதல்ல.நாம் கோரும் பொருளாதார சீர்திருத்தம் செல்வந்தர்களை ஏழைகளாக்கி விடுவதல்ல.மக்கள் சுகமாக வாழ வேண்டுமெனில் பணம் மட்டும் இருந்தால் போதாது.வாழ்க்கைப் பொருள்களும் அவற்றைப் பகிர்ந்து   நிரவியனுபவிக்கும் பொது நோக்கமும் தேவை." என்கிறார்.
கொசுறு :
பணம் உள்ளவனுக்குக்  கருமித்தனம் அவசியமில்லை.
கருமித்தனம் உள்ளவனுக்குப்  பணம் அவசியமில்லை

Friday, 1 March 2013

காயகல்ப யோகம்!(Kayakalpa Yoga)


ஒரு ஊரில் குடியானவன் ஒருவன், மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான்.
அவன் தினமும் தனது வயலுக்குச் சென்று விவசாய வேலைகளைச் செய்து வருவான்.வயலுக்குச்  செல்லும் வழியில் இருந்த ஒரு ஆலமரத்தின் கீழ்  சித்தர் ஒருவர் அமர்ந்திருப்பதைப் தினமும்பார்ப்பான்.அவர் எப்போதுமே கண் 
மூடித்  தியானத்தில் மூழ்கியிருப்பார். குடியானவன் அவரைத் தினமும் மரியாதை நிமித்தமாக வணங்கிவிட்டு வயலுக்குச் செல்வது வழக்கம்.குடியானவனைப்  
போல் அந்தப் பாதை வழியாகச் செல்வோர், சித்தரை வணங்கிவிட்டுச்  செல்வது வழக்கமாகிவிட்டது.
சித்தர் தவநிலையில் இல்லாமல் இருந்ததைக் குடியானவன், ஒருநாளும்
பார்த்ததில்லை.ஒரு நாள் சித்தர் கண்களைத்   திறந்து தேகப்பியாசம்  செய்து
கொண்டிருப்பதைக் குடியானவன் கவனித்தான்.சித்தருக்கு வணக்கம் செலுத்தி
விட்டுச்,"சித்தர் பெருமானே,  நீங்கள் கண் திறந்திருப்பதையோ, ஆகாரம் உட்கொள்வதையோ, உறங்குவதையோ,ஓய்வு எடுப்பதையோ இதுவரை நான் பார்த்ததில்லை.எப்படி உங்களால் இப்படி அன்னம்  ஆகாரமின்றி,உறக்கமின்றி,
ஓய்வு இல்லாமல் தவ நிலையிலேயே இருக்க முடிகிறது" என்று கேட்டான்.
அதற்குச், சித்தர்," உழவுத் தொழில் செய்து மற்றவர் பசி போக்கும் ஐயனே!,
நான் நெடுங் காலமாக  யோகம் பயின்று கொண்டிருக்கிறேன், அதில் 'லம்பிகா' என்ற யோகப்  பயிற்சி உண்டு.'லம்பிகா' யோகத்தை அனுசரித்தால், நெடு நாட்கள் வரை  உணவு தேவையிருக்காது, நாம் மூச்சு விடுவதைக்  கூட மற்றவர்களால் உணர முடியாது" என்று சொன்னார்.
இதைக் கேட்ட குடியானவனுக்கு 'லம்பிகா'யோகம் பயில்வதற்கு ஆர்வம் பிறந்தது.
"சித்தர் பெருமானே!, எனக்கு லம்பிகா யோகம் கற்றுத்தருகிறீர்களா,
கற்றுக்கொள்வதில்  ஆர்வமாய் இருக்கிறேன்" என்றான்.
இதற்குச்  சித்தர் "ஐயனே!, இது ஒரு கடுமையான பயிற்சி, நிறைய பொறுமை வேண்டும், உன்னைப் போன்று இல்லறத்தில் ஈடுபடுவோருக்கு  இது  அவசியமா என்பதையறியேன்" என்று சொன்னார்.
சித்தர் பல தடவை எடுத்துக் கூறியும் குடியானவன், 'லம்பிகா'யோகம் கற்றுக்   கொள்வதில் உறுதியாய் இருந்தான்.
வேறு வழியில்லாமல் சித்தரும் சம்மதம் தெரிவித்துப், பயிற்சியை ஆரம்பித்தார்.சில வருடங்களில் குடியானவன் 'லம்பிகா' யோகம் கற்றுத்  தேர்ச்சியடைந்தான்.
தான் பயின்ற 'லம்பிகா' யோகத்தை வீட்டிலேயே செய்ய எண்ணினான் 
குடியானவன்.ஒருநாள் வீட்டிற்குள் அமர்ந்து யோக நிலை எய்தி அன்னம்
ஆகாரமின்றி மூச்சில்லாமல் தவ நிலையில் அமர்ந்திருந்தான்.
கணவனைத் தொட்டுப்பார்த்த குடியானவனின் மனைவி அவன் மூச்சிலாமல் 
இருப்பதை அறிந்து, கணவன்  இறந்துபோனான் என எண்ணினாள்.
உற்றார் உறவினர்களை அழைத்து, இறுதிக்  கிரியைகளைச்செய்வதற்கு 
ஆயத்தமானாள்.

குளிப்பாட்டி, வீட்டு வாசலில் அமைக்கபட்டிருந்த இருந்த பாடையில் வைப்பதற்காகக் குடியானவனின் உடலை அவனது நெருங்கிய உறவினர்கள் தூக்கிச் சென்றார்கள்.அப்போது வாசலில் 
வைக்கப்பட்டிருந்த கயிற்றுக்கட்டிலின் முனை குடியானவனின் காலைத் தட்டியது.
உடனே குடியானவன் தவத்திலிருந்து விழித்து  எழுந்தான்.
எல்லோரும் ஆச்சர்யப்பட்டர்கள்.குடியானவன் உயிருடன் இருப்பதை 
அறிந்த உறவினர்கள் தத்தம் வீடுகளுக்குச்  சென்றனர்.
சில வருடங்கள் சென்றபின் குடியானவனுக்கு மறுபடியும் 'லம்பிகா' யோகம் பற்றிய எண்ணம் தோன்றியது.
முன்பு போலவே வீட்டின் நடுப்  பகுதியில் தவ நிலையில் அமர்ந்தான்.இம்முறையும் குடியானவனின் பேச்சுமுச்சற்ற 
நிலையைக் கண்ட மனைவி, கணவன் இறந்து போனான் என 
உறவினர்களுக்கு அறிவித்தாள்.உறவினர்களும் இறுதிக்கிரியைகளைச் செய்ய 
குடியானவனின் வீட்டில் கூடினார்கள்.
உடலைக் குளிப்பாட்டிய பின் அதைத் தூக்குவதற்கு ஆயத்தமானார்கள்.

அப்போது பதற்றத்துடன் குடியானவனின் மனைவி ஓடி வந்தாள்.குடியானவனின் உடலைத் தூக்கும் உறவினர்களைப்
பார்த்து அழுது கொண்டே," இம்முறை கயிற்றுக்கட்டிலின் முனை படாமல் 
கவனமாக உடலைத்  தூக்கிச் செல்லுங்கள், சென்ற
முறை எழுந்தது போல் இம்முறையும் எழுந்துவிடப் போகிறார்"  என்றாள்.
  
"லம்பிகா" யோகம் போன்ற கடுமையானப்  பயிற்சி இன்றைய வாழ்க்கை 
முறைக்கு அவசியமா? என்ற கேள்வி நம்முள் எழுவது இயல்பு.
நமது வாழ்வு சிறக்க "உடல் நலத்திற்கு தேவையான எளிமையான உடற்பயிற்சி,
மன நலத்திற்குத் தேவையான தவப் பயிற்சி, உயிர் நலத்திற்கு
தேவையான  காயகல்பப்  பயிற்சி"  இவை மூன்றும் அவசியம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி. காயகல்பம் யோகம் பற்றி வேதாத்திரி மகரிஷி,   
"முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்தும் வந்தார்கள்.வித்துவை உடலில் சுவற விட்டு, உடல் நலம் காத்து, மன வளம் காத்து, இளமை காத்து, எப்போதும் முதுமை இல்லாது இருக்கும் முறை ஒன்றையும். இரண்டாவதாக இரசவாதம் மூலமாக "முப்பு" என்ற முறையையும் கண்டு பிடித்தார்கள். இரசவாத முறை Philosopher Stone என்று மேல் நாட்டில் அனுபவத்திற்கு வந்தது இதை உண்டு விட்டால், முறையாக உடலை விட்டு உயிர் பிரியாது உடலை விட்டு உயிர் பிரிய வேண்டும் என்றால், உடலை விட்டு வித்து வெளியேற வேண்டும். வித்து உடையாமல்; உயிர் பிரியாமல் காத்துக் கொள்வதுதான் "முப்பு" என்ற மருந்து. அதைச் சாப்பிட்ட பிறகு ஒரு சிக்கல் எல்லாச் சித்தர்களுக்கும் வந்தது. உலகில் 200 வருடம் 300 வருடங்கள் 500 வருடங்கள் கூட வாழ்ந்து விட்டார்கள். எல்லாம் அனுபவித்தாகிவிட்டது. உலகை விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள் உயிர் போகவில்லை.

உயிரினங்களில் சில இயற்கையாகவே 'லம்பிகா' யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, தவளை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பத்துப் பதினைந்து நாட்கள் அப்படியே இருக்கும். தேவையில்லாதபோது உயிரை விட்டு விடும்.'லம்பிகா' யோகம் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் உள்ள உணர்வுகளெல்லாம் நின்றுவிடும். ஆனால் உயிர் போகாது. ஆனால் அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன. உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.

மனிதர்களில் சிலர் 'லம்பிகா' யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள். அதனாலேயும் உடலைவிட்டு உயிர் பிரியாத ஒரு சிக்கல் ஏற்பட்டது. காரணம் மனிதன் 'லம்பிகா' யோகம் செய்து மயக்க நிலையிலிருந்து திரும்பி வராமல் தன்னை மறந்து விடுகிறான். உயிர் இருக்கிறது. ஆனால் உணர்வு தெரிவதே இல்லை. உடனே மற்றவர்கள், இவர் இறந்து விட்டார் என்று கருதி அடக்கம் செய்து விடுகிறார்கள்.அதனால் அப்பயிற்சி நமக்குத் வேண்டியது இல்லை. தேவையும் இல்லை. அத்தகைய சிக்கல்கள் வராமலும் அதே சமயம் உடல் நலத்தைக் காத்து, ஆயுளைப் பெருக்கி, வாழும் காலம் வரைக்கும் நோயின்றி வாழ வைக்கக் கூடிய பயிற்சியே  'காயகல்ப யோகம்' “ என்கிறார்.
காயகல்பம் என்பது உணவு முறையோ மருந்தோ அல்ல.து ஒரு யோகப் பயிற்சிமுறை. 


கொசுறு:
நேயாளியின் மனைவியைத்  தனியே அழைத்த மருத்துவர், "உங்க கணவருக்கு 'ஹார்ட்அட்டாக்' ஆயிருக்கு, இனிமே ரெம்பக் கவனமா பார்த்துக்கணும், குறிப்பா அதிர்ச்சி தரும் விசயங்களைச்  சொல்லக்  கூடாது, இனி அவர் அதிக நாள் உயிர் வாழறது உங்க கையிலதான் இருக்கு" என்றார்.   
போகும்போது கணவன் கோட்டான், ஆமா, “டாக்டர் உன்கிட்ட தனியா ஏதோ சொன்னாரே அது என்னது? கண்டிப்பா ஏதோ சீரியஸ் விசயமாத்தான் இருக்கும், மறைக்காம சொல்லு” 
"ஒண்ணுமில்ல, நீங்க சாகப்போறீங்களாம்" 



மேலுள்ள கதை/கட்டுரையை  ஒலி  வடிவில் கேட்டு மகிழ கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
இக்கதை/கட்டுரை ATBC யில் (Australian Tamil Broadcasting Corporation) திரு.பவராஜா அய்யா அவர்களால் நடாத்தப்படும் "சிந்தனைக் களஞ்சியம்"
எனும் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டதின் மறுபதிவே  கீழுள்ள
இணைப்பு. வானொலியில் ஒலிபரப்பப்பட்ட அதே சமயம்  கைபேசியில் ஒலிப்பதிவு செய்ததால் ஒலியின் தரத்தில் குறைகள் உண்டு, அதற்காக வருந்துகிறோம்.