Tuesday, 25 June 2013

எண்ணமே வாழ்வு !

ஆன்மீக குரு ஒருவரிடம் மெத்தப் படித்த இரண்டு மாணவர்கள்
சீடர்களாக சேர்ந்தார்கள். ஒரு சீடர் பறவைகளைப்பற்றி ஆராய்ச்சி
 செய்தவர், இன்னொருவர் வணிகவியலில் மேற்படிப்பு படித்தவர்.
இருவரும் அவ்வப்போது அறிவார்ந்த விஷயங்கள் குறித்து  தங்களுக்குள் விவாதம் செய்வார்கள்.
தியானமும் குருவின் ஆன்மீக வழிகாட்டுதலும்   இரண்டு சீடர்களையும் உன்னத நிலைக்கு இட்டுச் சென்றது.
ஒருநாள் ஆசிரமத்தின் அருகில் இருந்த காய்கறி சந்தைக்கு
இருவருக்கும்  செல்லவேண்டியிருந்தது.
இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.
சந்தையின்  ஜன நெருக்கடியான பகுதியுள் நுழைந்தனர்.எங்கு பார்த்தாலும் ஜனக்கூட்டம் கூச்சல்,இரைச்சல்,சப்தம்.இதற்கிடையில் முதல் சீடர் நண்பனே! வெட்டுக்கிளி பறக்கும் சப்தம் உனக்கு கேட்கிறதா? என்றார்.
இரண்டாவது சீடருக்கு வெட்டுக்கிளியின் சப்தம் கேட்கவில்லை.
முதல் சீடன் கைகாட்டிய திசையில் சின்னஞ்சிறிய வெட்டுக்கிளி ஒன்று பறந்து செல்வதைப்  பார்த்தார்.
இவ்வளவு சப்தங்களுக்கும் கூச்சலுக்கும் மத்தியில் உங்களுக்கு மட்டும்  வெட்டுக்கிளியின்  ஓசை எப்படி கேட்டது என்றார்?.
முதல் சீடர் கூறினார், எனக்கு பறவைகளைப் பற்றியும் பூச்சியினங்களைப் பற்றியும் அறிந்து கொள்வதில் எப்போதுமே ஆர்வம் அதிகம்.எதையுமே உன்னிப்பாக கவனிக்க பழகிக் கொண்டதால்  பூச்சிகள் எழுப்பும் சப்தத்தையும் என்னால்  உணர முடிகிறது.நம்முடைய  எண்ணமும்,  சிந்தனையும்,ஆர்வமும்  எதில்  அதிகமோ மனமும் அதிலேயே  லயிக்கிறது என்றார்.
ஆச்சர்யமடைந்த இரண்டாவது சீடர் இதை எப்படி அறிந்துகொள்வது,ஏதாவது உதாரணம்  கூறி விளக்கமுடியுமா எனக் கேட்டார்.
மிகவும் எளிது, இப்போது பார், 
தனது கைப் பையிலிருந்து சில்லறைக் காசுகளை கைநிறைய எடுத்து தரையில்  விட்டெறிந்தார்  முதல் சீடர்.சில்லறை தரையில் விழும் சப்தம் கேட்டது.
அருகிலிருந்த கூட்டத்தினர் பலரும் முண்டியடித்து  தரையில் விழுந்த காசுகளை குனிந்து பொறுக்கத் துவங்கினர்.
இதைக் கவனித்த இரண்டாவது சீடர்  இப்போது எனக்கு புரிந்தது என கூறினார்.

இன்று  பலருக்கு எண்ணம் முழுவதும் பணம் சம்பாதிப்பது எப்படி என்று சிந்திப்பதிலேயே உள்ளது.அதற்காகவே முழு நேரத்தை  செலவும்  செய்கிறோம்.இது சரியா? என நமக்கு நாமே கேள்வியெழுப்ப வேண்டும்.
நமக்குத் தோன்றும் எண்ணங்களை யாராலும் அறிந்து கொள்ள முடியாது என்பதற்காக, எதை வேண்டுமானாலும் மனதில் நினைக்கலாமா?, கற்பனை பண்ணலாமா?. ஒருவனுடைய உயர்வும் தாழ்வும்  அவனது மனதில் தோன்றும் எண்ணங்களே.
மனதில் நல்ல எண்ணங்களை உதிக்கப் பண்ணவேண்டும், தூய்மைப்படுத்திக்கொள்ள  வேண்டும், பலப்படுத்திக்கொள்ள வேண்டும்,நமது மனதில் தோன்றும் எண்ணங்களே, எல்லாவற்றிர்க்கும் அடிப்படை என்கிறார் வேதாத்திரி மகரிஷி. எண்ணம் பற்றி தனது வழக்கமான "எளிய" பாணியில் பின் வருமாறு கூறுகிறார் :

"எண்ணத்தின் அளவையொட்டியே மனத்தின் தரமும் உயர்வும் அமைகின்றன. மனத்தின் அளவில் தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எண்ணத்தைக் கொண்டுதான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்டவும் வேண்டும்.

எண்ணத்தை ஆராயவேண்டுமென்றால், எண்ணத்தால்தான் ஆராய வேண்டும். எண்ணத்துக்குக் காவலாக எண்ணத்தையே வைக்க வேண்டும். எண்ணத்திற்கு நீதிபதியாகக் கூட எண்ணத்தைத் தான் நியமித்தாக வேண்டும். ஏனென்றால், வேறு ஆள் இல்லை. மேலும், வேறு யாராலும் இக்காரியங்களை முடிக்க முடியாது. காரணம் ஒருவரது எண்ணத்தை அறிந்து கொள்ள அவருடைய எண்ணத்தைத் தவிர வேறு யாராலும் முடியாதே!

எண்ணம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். எண்ணம் எப்பொழுதும் தன்னையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எண்ணம் தன்னையே கண்காணித்துக் கொண்டு, தன்னையே நெறிப்படுத்திக் கொண்டு, தன்னையே திருத்திக் கொண்டு இருக்க வேண்டும். இதுதான் தற்சோதனை என்ற அகத்தாய்வு (Introspection). அந்த அகத்தாய்வை வாரம் ஒரு முறை, மாதம் ஒருமுறை என்று அவ்வப்போதும் செய்ய வேண்டும், கணத்துக்குக் கணமும் செய்ய வேண்டும். அப்போது தான் குணநலப்பேறு வரும். முழுமைப்பேறு வரும்".



கொசுறு :டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு

இத நீங்க சொல்லவே வேண்டாம், எங்கிட்ட நீங்க வந்தத வச்சே புரிஞ்சுக்க முடியும்