Saturday, 18 May 2013

பாவமும் புண்ணியமும்!

ஒரு ஊரிலேபத்து விவசாயிகள் இருந்தார்கள்.
ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.

பயந்துபோன அவர்கள் ஓடிச்சென்று பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஒளிந்து கொண்டனர்.
வெகுநேரமாகியும் மின்னல் மின்னுவதும்  இடி இடிப்பதும் நிற்கவில்லை.  பயத்தால்  நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் 'நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்' என்று சொன்னான்.
மற்றவர்களும்இதனை ஆமோதித்தார்கள்.
இத்தனை பேருக்குள் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன்படி  ஒருவொருவரும் தத்தம் தலையிற் கட்டியிருந்த தலைப்பாகையைக் கையிற் பிடித்துக் கொண்டு மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.
அனைவரும் தத்தம் தலைப்பாகையை மழையில் நீட்டினர்.

பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் மின்னியது. அதில் விவசாயி ஒருவரின் தலைப்பாகை மட்டும் எரிந்து சாம்பலாகியது.

மற்றையஒன்பது விவசாயிகளும் "இவன்தான் பாவி. முதலில் இவனின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு" என்று கத்திக் கொண்டே அவன் மேற் பாய்ந்தனர்.
அந்த விவசாயி கெஞ்சிக் கதறித் தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர்கள்  எவரும் அதைக் காதிற் போட்டுக் கொள்ளவில்லை. அவனின்  கழுத்தைப் பிடித்துப் பலவந்தமாக வெளியே தள்ளினர். 
அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.

அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் மின்னி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியடைந்து அந்த இடத்திலேயே நின்று விட்டான். சற்று நேரத்தின் பின்  சுயநிலைக்குத் திரும்பிய  அவன் மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.
மண்டபத்தில் இடி விழுந்து, மண்டபம் முழுவதும் நொருங்கிக் கிடந்தது. ஒன்பது விவசாயிகளும் பரிதாபமாக உடல் கருகிச் செத்துப் போயிருந்தனர்.
பாவமும் புண்ணியமும் பற்றி வேதாத்திரி மகரிஷி சொல்வது இதுதான் :
"நன்மையும் தீமையும் செயல்களில் இல்லை. செய்யும் செயல் என்னென்ன விளைவுகளைத் தருமோ, அந்த விளைவுகளைக் கொண்டு தான் நன்மையும் தீமையுமாகப் பிரித்துப் பார்க்கிறோம். அது நன்மையான விளைவாக இருந்தால் 'புண்ணியம்' என்றும், தீமையான விளைவாக இருந்தால் 'பாவம்' என்றும் கூறுகிறோம்.
பசி எடுக்கிறது. உணவு சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்கிறோம். ஆனால், நாவுக்குச் சுவையாகவும், நன்றாகவும் இருக்கிறது என்பதற்காக அதிகப்படியாக உண்டால் என்ன ஆகும்? அந்த உண்ட உணவே தீமையை உண்டாக்குகிறது. ஆகவே, செயலில் பாவம், புண்ணியம் இல்லை. செயல்களின் விளைவுகளைத்தான் கவனிக்க வேண்டும். இதற்கு ஒரு சாம்யம் (Formula) கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது புண்ணியம் எது? பாவம் எது? என்று சிந்திக்க வேண்டும்.
புண்ணியம் எது? எண்ணம், சொல், செயல் ஆகிய ஏதொன்றாலும் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடலுக்கோ துன்பம் தராது, விழிப்போடு, துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும் புண்ணியத்தின் பாற்படும்.
பாவம் எது? ஒருவரது எண்ணம், சொல், செயல் இவைகளினால் எதனாலேனும் தனக்கேனும், பிறருக்கேனும் அன்றைக்கோ, பிற்காலத்திலோ, உடலுணர்ச்சிக்கோ, பகுத்தறிவுக்கோ துன்பம் விளைவிப்ப தாக இருந்தால் அத்தகைய செயல்கள் பாவம் என்பதாகும்."

கொசுறு:


பாவியே ! உன்னோட கடைசி ஆசை என்ன?

என்னைத் தூக்கில் போடுவதை வீடியோவில் எடுத்து எனக்கு போட்டுக் காட்டணும்! 

நமக்குச் சொந்தம்?




குரு ஒருவர் ஞான மார்க்கத்தைப் போதித்து வந்தார்.
அவரிடம் ஆன்மீக அனுபவம் வேண்டி ஐந்து சீடர்கள் அவரது ஆசிரமம் தேடி வந்தனர்.
குரு அவர்களிடம் "நீங்கள் தண்ணீர் அருந்துவதற்கு அவரவர் வீட்டிலிருந்து ஒரு செம்பை மட்டும் எடுத்து வாருங்கள், மற்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஆசிரமத்தில் உள்ள பொருட்களை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார் குரு கூறியது போல் ஒவ்வொரு சீடரும் செம்பு ஒன்றைக் கொண்டுவந்தார்கள்.
குருவின் ஆன்மீக உணர்வும் அனுபவமும் சீடர்களுக்கு இறையுணர்வு பெறுவதற்கு உதவியாய் இருந்தது.குருவின் ஆன்மீகக் கல்வியும் வழிகாட்டலும்  அவர்களது சுய சிந்தனையைத் தூண்டியது.அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் குருவின் முயற்சியில் சீடர்களும் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டனர்.சில வருடங்களில் ஐந்து சீடர்களும் குரு கற்றுத்தந்த ஆன்மீகக் கல்வியில் சிறந்து விளங்கினார்கள்.குருவைத் தேடிவரும் அன்பர்கள் அனைவரும்  ஐந்து சீடர்களையும் மதித்துப் போற்றி வந்தனர்.தேவையான சந்தர்ப்பங்களில் ஞான மார்க்கத்தை, ஆசிரமம் வரும் அன்பர்களுக்கு சீடர்கள் போதிக்கத் தவறுவதில்லை.
குரு முதுமையடைந்தார்.
தனது ஆயுள் முடிவடையும் நேரம் நெறுங்குவதை உணர்ந்தார். தனக்குப் பிறகு யாருக்குப்  பொறுப்பை ஒப்படைப்பது? ஐந்து சீடர்களும் எல்லாவற்றிலும் சமமானவர்கள்.ஆனால்,ஆசிரமப் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைப்பதே முறை.ஆகவே அவர்களுக்கு ஒரு சோதனை வைத்தார்.
ஐந்து சீடர்களையும் அழைத்து அவர்கள் ஆசிரமம் வரும்போது கொண்டுவந்த செம்பை எடுத்துவரச் சொன்னார்.நான்கு சீடர்கள் அவரவர் செம்பை எடுத்துவந்து குருவின் முன் வைத்தார்கள். 
 ஒரு சீடர் மட்டும் கையில் ஏதும் இல்லாமல் குருவின் காலடியில் வந்து அமர்ந்தார். குரு அந்த சீடரிடம் "நீ மட்டும் செம்பை ஏன் எடுத்துவரவில்லை?" என்று கேட்டார்.அதற்கு அந்த சீடர், "குருவே! இங்கு வந்தபின் உங்களது வழிகாட்டலில் நான், என்னுடையது
என்ற எண்ணமே போய்விட்டது.கொண்டுவந்த செம்பை ஆசிரம
உபயோகத்திற்காக பயன்படுத்தியதால்
நான் கொண்டு வந்தது எது என்றே தெரியாது, பிறக்கும் போது கொண்டுவந்தது எதுவும் இல்லை ஆகவே எனக்குச் சொந்தமானது ஒன்றுமில்லை" என்றார்.அந்த சீடருக்கே ஆசிரமப்  பொறுப்பை ஒப்படைத்தார் குரு.
மற்ற சீடர்களும் அதை சந்தோசமாய் ஏற்றுக்கொண்டு ஆன்மீகத் 
தேடலில் தங்களை முழுமையாய் ஈடுபடுத்தத் தொடங்கினர்.  
  
உலகில் எதுவுமே நம்முடையது இல்லை என்பதை உணர்ந்தால் நாம் ஆன்மிகத்தில் முதல் அடியை எடுத்து வைக்கிறோம் என்று பொருள். "இது என்னுடையது" என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை.
"எதுவும் என்னுடையதுஅல்ல!" என்கிற பக்குவம் வரும்போது,
 விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை!. 

இதையே வேதாத்திரி மகரிஷி "நான் பிறந்தேன்; வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.ஒரு நாளைக்கு முடியப் போகிறேன்.
இதற்கு மத்தியில் எவ்வளவுதான் இருந்தபோதிலும் கூட, சீரணிக்கக் கூடிய 
அளவிற்கு மேல் சாப்பிடப் போவதில்லை;
உடல் தாங்குகிற அளவுக்கு மேல் துணியைப் போடுவதில்லை;
நின்றால் கால் அளவு, படுத்தால் உடலளவு;இதற்கு மேல் பூமியை அனுபவிக்கக்கூடியவர்களும் இல்லை.வரும் போது கொண்டு வருவதில்லை.போகும் போது கொண்டு போகப் போவதும் இல்லை.இந்த உண்மையை அப்படியே  மனதிலே
ஏற்றுக்கொள்ளுங்கள்.அப்போது நமக்கு எந்தெந்த இடத்திலே என்னன்ன
கிடைக்கிறதோ, அது நிறைவாகத்தான் இருக்கும்" என்கிறார்.

கொசுறு :
இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு
இதுக்கு நடுவுல நமக்கு எதுக்கு பீலு (feel)