Saturday, 18 May 2013

நமக்குச் சொந்தம்?




குரு ஒருவர் ஞான மார்க்கத்தைப் போதித்து வந்தார்.
அவரிடம் ஆன்மீக அனுபவம் வேண்டி ஐந்து சீடர்கள் அவரது ஆசிரமம் தேடி வந்தனர்.
குரு அவர்களிடம் "நீங்கள் தண்ணீர் அருந்துவதற்கு அவரவர் வீட்டிலிருந்து ஒரு செம்பை மட்டும் எடுத்து வாருங்கள், மற்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஆசிரமத்தில் உள்ள பொருட்களை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார் குரு கூறியது போல் ஒவ்வொரு சீடரும் செம்பு ஒன்றைக் கொண்டுவந்தார்கள்.
குருவின் ஆன்மீக உணர்வும் அனுபவமும் சீடர்களுக்கு இறையுணர்வு பெறுவதற்கு உதவியாய் இருந்தது.குருவின் ஆன்மீகக் கல்வியும் வழிகாட்டலும்  அவர்களது சுய சிந்தனையைத் தூண்டியது.அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் குருவின் முயற்சியில் சீடர்களும் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டனர்.சில வருடங்களில் ஐந்து சீடர்களும் குரு கற்றுத்தந்த ஆன்மீகக் கல்வியில் சிறந்து விளங்கினார்கள்.குருவைத் தேடிவரும் அன்பர்கள் அனைவரும்  ஐந்து சீடர்களையும் மதித்துப் போற்றி வந்தனர்.தேவையான சந்தர்ப்பங்களில் ஞான மார்க்கத்தை, ஆசிரமம் வரும் அன்பர்களுக்கு சீடர்கள் போதிக்கத் தவறுவதில்லை.
குரு முதுமையடைந்தார்.
தனது ஆயுள் முடிவடையும் நேரம் நெறுங்குவதை உணர்ந்தார். தனக்குப் பிறகு யாருக்குப்  பொறுப்பை ஒப்படைப்பது? ஐந்து சீடர்களும் எல்லாவற்றிலும் சமமானவர்கள்.ஆனால்,ஆசிரமப் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைப்பதே முறை.ஆகவே அவர்களுக்கு ஒரு சோதனை வைத்தார்.
ஐந்து சீடர்களையும் அழைத்து அவர்கள் ஆசிரமம் வரும்போது கொண்டுவந்த செம்பை எடுத்துவரச் சொன்னார்.நான்கு சீடர்கள் அவரவர் செம்பை எடுத்துவந்து குருவின் முன் வைத்தார்கள். 
 ஒரு சீடர் மட்டும் கையில் ஏதும் இல்லாமல் குருவின் காலடியில் வந்து அமர்ந்தார். குரு அந்த சீடரிடம் "நீ மட்டும் செம்பை ஏன் எடுத்துவரவில்லை?" என்று கேட்டார்.அதற்கு அந்த சீடர், "குருவே! இங்கு வந்தபின் உங்களது வழிகாட்டலில் நான், என்னுடையது
என்ற எண்ணமே போய்விட்டது.கொண்டுவந்த செம்பை ஆசிரம
உபயோகத்திற்காக பயன்படுத்தியதால்
நான் கொண்டு வந்தது எது என்றே தெரியாது, பிறக்கும் போது கொண்டுவந்தது எதுவும் இல்லை ஆகவே எனக்குச் சொந்தமானது ஒன்றுமில்லை" என்றார்.அந்த சீடருக்கே ஆசிரமப்  பொறுப்பை ஒப்படைத்தார் குரு.
மற்ற சீடர்களும் அதை சந்தோசமாய் ஏற்றுக்கொண்டு ஆன்மீகத் 
தேடலில் தங்களை முழுமையாய் ஈடுபடுத்தத் தொடங்கினர்.  
  
உலகில் எதுவுமே நம்முடையது இல்லை என்பதை உணர்ந்தால் நாம் ஆன்மிகத்தில் முதல் அடியை எடுத்து வைக்கிறோம் என்று பொருள். "இது என்னுடையது" என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை.
"எதுவும் என்னுடையதுஅல்ல!" என்கிற பக்குவம் வரும்போது,
 விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை!. 

இதையே வேதாத்திரி மகரிஷி "நான் பிறந்தேன்; வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.ஒரு நாளைக்கு முடியப் போகிறேன்.
இதற்கு மத்தியில் எவ்வளவுதான் இருந்தபோதிலும் கூட, சீரணிக்கக் கூடிய 
அளவிற்கு மேல் சாப்பிடப் போவதில்லை;
உடல் தாங்குகிற அளவுக்கு மேல் துணியைப் போடுவதில்லை;
நின்றால் கால் அளவு, படுத்தால் உடலளவு;இதற்கு மேல் பூமியை அனுபவிக்கக்கூடியவர்களும் இல்லை.வரும் போது கொண்டு வருவதில்லை.போகும் போது கொண்டு போகப் போவதும் இல்லை.இந்த உண்மையை அப்படியே  மனதிலே
ஏற்றுக்கொள்ளுங்கள்.அப்போது நமக்கு எந்தெந்த இடத்திலே என்னன்ன
கிடைக்கிறதோ, அது நிறைவாகத்தான் இருக்கும்" என்கிறார்.

கொசுறு :
இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு
இதுக்கு நடுவுல நமக்கு எதுக்கு பீலு (feel) 

No comments:

Post a Comment