Monday, 28 January 2013

உழைப்பே உயர்வு!

'எழிலன்' என்று சொன்னால் அந்த ஊரில் தெரியாதோர் யாருமில்லை. அந்த ஊர்ச் சிறுவர்கள் கூட அவனைச்  'சோம்பல் எழிலன்' என்று கூப்பிடுவது வாடிக்கையாகிவிட்டது.
'எல்லாம் அவனது அம்மா கொடுத்த செல்லம்' இப்படிதான் குறைபட்டுக் கொள்வார் எழிலனின் அப்பா.அவர் ஒரு கடும் உழைப்பாளி.தனது வாழ்நாள் முழுவதையும் தனது குடும்பத்திற்காகவும் ஊர் மக்களுக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டவர்.'இப்படிப்பட்டவருக்கு ஓர் சோம்பேறி மகனா?' என்று ஊர் மக்கள் பேசிக் கொள்வார்கள்.
எழிலன் பட்டப் படிப்பை முடித்துவிட்டு  வேலையை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.தங்கை யாழினியோ   பள்ளி இறுதியாண்டில்  படித்துக்கொண்டிருந்தாள்.
'வேலை நம்மைத் தேடி வராது, நாம் தான் அதைத் தேடிப் போக வேண்டும்' என எழிலனுக்கு அவனது அப்பா புத்திமதி கூறுவார்.அவன் இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்வதோடு சரி. 
எழிலனுக்கு வேலை கிடைத்தபாடில்லை.ஒரு வருடம் இரண்டு வருடமல்ல ஏழு வருடங்கள் அவன் காத்திருந்தான்.தங்கை யாழினி திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குப்  போய்விட்டாள்.
பொறுப்பு ஏதுமில்லாமல் அம்மாவின் தயவால் உழைக்காமல் வீட்டிலேயே சாப்பிடுவதிலும், தூங்குவதிலும் பொழுதைக் கழித்தான் எழிலன்.  
பொறுமையாய் இருந்த அப்பா ஒரு நாள் எழிலனைப் பார்த்து, 'வேலை செய்து உழைத்துச்  சம்பாதிக்காமல் இருப்பாயென்றால் உனக்கு இந்த வீட்டில் இடமில்லை' என்றார்.
அவர் வழக்கமாக கூறும் வார்த்தைதான் என்றாலும் அன்று சற்றுக்  கடுமையாகவே பேசிவிட்டார்.எழிலனுக்கு ஆத்திரம் வந்தது.அம்மா எவ்வளவோ சொல்லியும் கேளாமல் வீட்டை விட்டுக்  கோபமாய் வெளியேறினான்.
ஊரின் குளக்கரையில் இருந்த ஆலமரத்தின் கீழே படுத்துத் தூங்கினான்.மாலை நேரம் வந்ததும்  வீடு திரும்பினான்.எழிலனைப் பார்த்த அம்மா அவனுக்கு ஆறுதல் கூறினாள்.அவன் கையில் இரண்டு நூறு ரூபாய்த் தாள்களைத் திணித்தாள்."அப்பா வீடு வந்ததும் ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து, நீயே உழைத்துச் சம்பாதித்தது என்று அவரிடம் கூறு" என்று கூறினாள்.
அவனும் அம்மா கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டான்.அப்பா வந்ததும் அவர் கையில் பணத்தைக் கொடுத்து தானே உழைத்துச்  சம்பாதித்த பணம் இது எனக் கூறினான்.
அப்பாவோ, அவன் கொடுத்த பணத்தை நான்காகக்  கிழித்து எரிந்துகொண்டிருந்த விறகடுப்பிற்குள் விட்டெறிந்தார்.எழிலன் அவர் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.அம்மா  ஒன்றும் பேசவில்லை.
மறு நாள் காலையில் அப்பாவோ கோபத்துடன் "உழைக்காமல் நீ  வீட்டிற்கு வரக் கூடாது" எனக் கத்திவிட்டு  வெளியிற் சென்றார்.அவனுக்கு கோபம் கோபமாய் வந்தது.முதல் நாள் போலவே வீட்டை விட்டு வெளியேறினான்.ஆலமரத்தடியில் வந்து படுத்து உறங்கினான்.இருட்டுமுன் வீடு திரும்பினான்.அவனது அம்மா அவன் கையில் கசங்கிய இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தாள்."இது கசங்கிய நோட்டு என்பதால் உண்மையாகவே நீ சம்பாதித்தது என அப்பா நம்பிவிடுவார்" என்றாள்.அப்பா வந்ததும் அவர் கையில் கசங்கிய ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து "இது நான் சம்பாதித்த பணம்" என்று கூறினான்.சென்ற முறை போலவே அன்றும் அவர் அந்த ரூபாய் நோட்டுகளைக் கொண்டுபோய் எரியும் அடுப்பில் விட்டெறிந்தார்.செய்வதறியாத எழிலன் அதையும்  பொறுமையாய்க்  கவனித்துக்கொண்டிருந்தான்.அப்பாவோ கோபமாய் அவனைப் பார்த்துவிட்டுத்  தனது அறைக்குள் சென்றுவிட்டார்.
அதி காலையில் அவனிடம் கடுமையாய் நடந்துகொண்டார்."இனிமேல் உழைக்காமல் நீ வீட்டு வாசற்படி ஒருக்காலும் மிதிக்கக் கூடாது" எனக் கத்திவிட்டுச் சென்றார்.
அன்று அவனும் ஒரு முடிவுடன் வீட்டை விட்டு வெளியேறினான்.அம்மா கத்திக்கத்தி அழைப்பது கூட அவன் காதில் விழவில்லை.
காய்கறிச் சந்தைக்குச் சென்றான், கிடைத்த கூலிவேலையைச் செய்தான்.பாரமுள்ள காய்கறி மூட்டைகளைச் சுமந்தான்.கூலிப் பணம் பெற்றுக்கொண்டு மாலையில் வீடு திரும்பினான்.அம்மாவிடம் கூலிப் பணம் நூற்றைம்பது ரூபாய்களைக் கொடுத்து அப்பாவிடம் கொடுக்கும்படி கூறினான்.அம்மாவும் அவன் கொடுத்த பணத்தை அப்பா வந்ததும் கொடுத்தாள்.வழக்கம் போல் ரூபாய்த் தாள்களை அடுப்பில் வீசிஎறிந்தார் அவர்.அப்பாவைக் கவனித்துக் கொண்டிருந்த எழிலன், ஓடிவந்து அடுப்பில் விழுந்த ரூபாய்த் தாள்களை அவசர அவசரமாகப்  பொறுக்கி எடுத்தான்.அப்பா ஓடி வந்து அவனைக்  கட்டித் தழுவிக் கொண்டார்.பேசாமல் கவனித்துக்கொண்டிருந்த அம்மாவிடம் அவர் கூறினார், "இதற்கு முன் நான் விட்டெறிந்த ருபாய் நோட்டு அனைத்தும் எழிலன் சம்பாதித்தது இல்லையென்பதை, அவன் பணம் நெருப்பில் எரிவதை வேடிக்கை பார்க்கும் போதே அறிந்து கொண்டேன்" எனக்  கூறினார்.கஷ்ட்டப் பட்டு உழைத்த பணத்தை நெருப்பில் போடுவதை 
யார்தான் அனுமதிக்க முடியும்? அதை எப்படி வேடிக்கையாக  பார்த்துக் கொண்டிருக்க முடியும்?.
"உழைப்பின் உயர்வை அவனுக்கு உணர்த்தவே" இவ்வாறு செய்தேன் என்றார்.இப்போது அம்மா புரிந்து கொண்டாள்.
எழிலன் தனது தவறை உணர்ந்து உழைத்து முன்னேற உறுதி  பூண்டான்.உழைப்பின் அருமையையும்  புரிந்து கொண்டான்.ஊர்மக்கள் மெச்சும் வண்ணம் உழைத்து முன்னேறினான்.

 
வேதாத்திரி மகரிஷி  உழைப்பைப்  பற்றி கூறுகையில்  
"உலகில் வாழ் மக்கள் அனைவருக்கும் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்குப்  பொருளாதார வளம் அமையவேண்டும். பணம் என்பது உழைப்பின் அடையாளம் (token of labour is money).
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும். மேலும் ஒருவரின் ஊதியம் இன்னொரு குடும்ப உறுப்பினருக்கும் நிறைவு
செய்யக்கூடிய அளவில் அமையவேண்டும்.உழைக்கத் தெரியாத, உழைக்க முடியாத மக்களுக்கும் ஏற்றதொரு வாழ்வாதாரத்தை
அரசு அமைக்கவேண்டும். மேலும் உலகில் ஒருவர் உழைப்பை இன்னொருவர் பறித்துண்ணும் போக்கு வெகு அதிகமாகவே உள்ளது. இது மக்களிடம் மட்டுமல்ல, ஆட்சியாளரிடமுங் கூட அமைதுள்ளது. இந்த நிலை மாறவேண்டும். எல்லோருக்கும் வேலைவாய்ப்பு
அளிக்கப்பட வேண்டும். அனைவரும் உழைத்துண்டு வாழ வேண்டும். உழைப்பின் அவசியத்தை அனைவரும் அறியவேண்டும்" என்கிறார்.

கொசுறு :
பக்தா, உன் துயர் துடைக்க கூரையைப்
பிய்த்துக் கொண்டு கொடுப்பேன் என்றார் கடவுள் 
வேண்டாம், நான் உழைத்துச் சம்பாதித்தது
அது ஒன்றுதான் என்றான் பக்தன் 

Tuesday, 8 January 2013

சமுதாயக் கடமை!(Social Responsibility)



தங்கமணி  தான் படித்த பள்ளிக்கு வெகு நாட்களுக்குப் பின் சென்றான்.
கடந்த ஏழு  ஆண்டுகளுக்குள் எத்துனை மாற்றங்கள், புதிய கட்டடங்கள், புதிய மைதானம்,புதிய ஆராய்ச்சிக் கூடம்.அவனால் நம்பவே  முடியவில்லை.
அவனுக்கு கோபமும் ஆத்திரமும்  வந்தது.இவையனைத்தும்   என்னைப் போன்று மாணவர்களிடமிருந்து அதிகப்படியாய் வசூலித்து கட்டியதுதானே?.
இவர்களுக்குத்  தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
இப்படிப்  பல எண்ணங்கள் அவன் மனதிலே ஓடியது.அனுமதி பெற்று தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்தான் அவன்.
தலைமை ஆசிரியருக்கு மரியாதை நிமித்தமாய் வணக்கம் தெரிவித்தான்.
முதல் பார்வையில் அவனை அடையாளம் தெரியாமல் இருந்தாலும், 
தன்னிடம் பயின்ற மாணவன்தான் என ஞாபகப்படுத்திக் கொண்டார்.
எதிரில் இருந்த  இருக்கையில் அவனை அமரச் சொன்னார்.
"பத்தாம் வகுப்பில் நீங்கள்தான் எனக்கு கணக்குப் பாடம் நடத்தியது"
என்ற அவன் சொன்ன போது தலைமை ஆசிரியர் "ஒ!அப்படியா"
என்று ஆர்வமாய் கேட்டுக் கொண்டார்.அவன் அந்தப்பள்ளியில் படிக்கும்போது அவர் வெறும் கணக்கு வாத்தியார் மட்டும்தான்.
தங்கமணி பள்ளிக்கு வந்த விபரம் கூறினான்.
அவன் சொன்னான், ஐயா! இந்தப் பள்ளியில் படித்தபோது நான்  ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லை.ஆசிரியர்கள் யாரும் உருப்படியாய் பாடமும்  நடத்தவில்லை.
இதுவரை என்னுடைய அறிவில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை.பள்ளியில் படித்தது எந்த வகையிலும் உபயோகமாய் இல்லை.
படிக்கும் கல்லூரியிலும் இதனால் பிரச்னை.எல்லாவற்றிற்கும் பள்ளிதான் காரணம் என்றான்.   
கேட்டுக்கொண்டிருந்த தலைமை ஆசிரியருக்கு அவனது குற்றச்சாட்டு  அதிர்ச்சியும்,வியப்புமாய் இருந்தது.
அவன் மேலும் தொடர்ந்தான்,உபயோகமில்லாத கல்வியை பல வருடங்கள் 
கற்றுக் காலத்தையும்,அதிகப்படியான பணத்தையும் 
இழந்துவிட்டதாகவும்,பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும்இதற்குப்
பொறுப்பேற்று தகுந்த நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று கூறித் தனது பேச்சை நிறுத்தினான்.
தலைமை ஆசிரியருக்கு அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு சிறிது நேரம் ஆனது.
சுதாரித்துக்கொண்டபின் இவனுக்கு பையித்தியம் பிடித்துவிட்டதா?
 என எண்ணி, தங்கமணி நீ கூறுவது புதினமாய் உள்ளதே, நான் இது போன்ற 
குற்றச்சாட்டை இதுநாள் வரைக் கேள்விப்பட்டதில்லை என்றார்.
அவன் சொன்னான், ஐயா, நான் கூறுவது முற்றிலும் உண்மை இதை 
யார் முன்னிலையிலும் நிரூபிக்கத் தயார் என்றான்.
 உடனே,தலைமை ஆசிரியர் தங்கமணிக்கு பள்ளி இறுதியாண்டில் பாடம் நடத்திய மற்ற ஆசிரியர்கள் அனைவரையும் அவரது அறைக்கு அவசரமாய் வரச் செய்தார்.
தங்கமணியின் குற்றச்சாட்டை அவர்களிடம் விவரித்தார்.
குற்றச்சாட்டைக் கேட்ட  ஆசிரியர்  அனைவரின் முகமும்  இறுகிப் போனது.
தலைமை அசிரியருக்கு ஒரு உபாயம் தோன்றியது.அவர் சொன்னார், தங்கமணி "நீ சொல்வதை எங்கள் ஒருவராலும் ஒப்புக் கொள்ள இயலாது.
நாங்கள் உனக்கு நடத்திய எல்லா பாடங்களிலும்  தேர்வு  
வைக்கிறோம்.ஒவ்வொரு பாடத்திலும் பத்து வினாக்கள் கேட்கப்படும்.அதில் நீ ஏதாவது ஒன்றில் "PASS " பண்ணினாலும், 
உன்னுடைய கூற்றை நீ திரும்பப் பெற வேண்டும்.
அனைத்துப்  பாடங்களிலும்  நீ "FAIL" ஆனால் உனக்கு நஷ்ட ஈடு கொடுக்க
ஒப்புக் கொள்கிறோம்" என்றார்.
மற்ற ஆசிரியர்களும், அரை மனதுடன் ஒப்புக் கொண்டனர்.

"இந்தக் கணக்கு வாத்தியின்  சிந்தனை எப்போதுமே முக்கோணம் போன்று கோணல்தான்" என்று  மனதுக்குள் எண்ணிக் கொண்டனர்.
தங்கமணி தேர்வு எழுத சந்தோசமாய் ஒப்புகொண்டான்.
தலைமை ஆசிரியர் மற்ற  ஆசிரியர்கள் அனைவரையும் தனி  அறைக்குள்   
அழைத்துச் சென்றார்.தேர்வுக்கான வினாக்கள் மிக மிக எளிதாக இருக்க
வேண்டும் என்றும் தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்கள் 
பெறுவதற்கு தங்கமணிக்கு எந்தச் சிரமமும்இருக்கக் கூடாது 
என்பதையும்  தெரிவித்தார்.
ஆசிரியர்கள் அனைவரும் அதை ஒப்புக் கொண்டனர்.மிக மிக எளிதான வினாக்களாக தெரிவு செய்து வினாத்தாள்களைத் தயாரித்தனர்.
முதலில் தமிழாசிரியர் தனது வினாத்தாளுடன் தங்கமணி  இருந்த அறைக்குள் நுழைந்தார்.
தங்கமணியும் தமிழாசிரியரை எதிர்கொள்ளத்  தயாரானான்.
ஐந்தாம் வகுப்புப்  படிக்கும் மாணவனும் எளிதில் பதில் சொல்லும் வண்ணம் பத்து வினாக்களை வடிவமைத்திருந்தார் அவர்.
திட்டமிட்டபடி தங்கமணியிடம் வினாத்தாள் கொடுக்கப்பட்டது.
வினாக்களுக்கான விடை அனைத்தும்   தெரிந்திருந்தும் தவறாகவே
பதில் எழுதினான்.
எழுதி முடித்ததும் விடைத்தாளை தமிழாசிரியரிடம் கொடுத்தான்.
அவன் எழுதிய விடைகளுக்கு  அவரால் நூற்றுக்கு பத்து மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்க முடிந்தது.
தங்கமணி தமிழ்த்  தேர்வில்"FAIL " எனத் தமிழாசிரியர் அறிவித்தார்.
தங்கமணி தலைமை ஆசிரியரிடம்  சொன்னான், 'ஐயா! முன்னமே நான் கூறினேன், எனக்கு ஆசிரியர்கள் யாருமே சரியாகப்  பாடம் நடத்தவில்லையென்று, பார்த்தீர்களா,
தேர்ச்சிபெறத் தேவையான மதிப்பெண்கள் கூட என்னால் பெற முடியவில்லை.எனது  குற்றச்சாட்டை  இப்போதாவது ஒப்புக்கொள்கிறீர்களா? என்றான்.அடுத்து,ஆங்கில வாத்தியார் வந்தார்.பத்து வினாக்கள் அடங்கிய வினாத்தாளை  தங்கமணிக்குக் கொடுத்தார்.முன்பு போலவே தவறாகவே அனைத்து வினாக்களுக்கும்
பதில் எழுதினான்.அவரும், அவன் தேர்ச்சி பெறவில்லை என அறிவித்தார்.அறிவியல் 
ஆசிரியரும், வரலாற்று ஆசிரியரும் அவர்கள் வைத்த, தேர்வில் தங்கமணி 'தேர்ச்சி பெறவில்லை'  என்றே அறிவித்தனர்.
தங்கமணிக்கு சந்தோசம் தாங்கவில்லை.இனி கணக்குத்  தேர்வு ஒன்றுதான் பாக்கி.தலைமை ஆசிரியர் சொன்னார், தங்கமணி நாங்கள் தொற்றுப் போனோம்,
நீ இதுவரை நடந்த தேர்வில் ஒரு பாடத்திலும் தேர்ச்சி பெறவில்லை, உனக்கு நஷ்டஈடு கொடுப்பதே முறை என்றார்.
'எனது  குற்றச்சாட்டு உண்மை என இப்போதாவது ஒப்புக்கொண்டீர்களே அதுவரை சந்தோசம்' என்றான் அவன்.
தலைமை ஆசிரியர்,தங்கமணி, " நீ  வகுப்பு வாரியாக செலுத்திய பள்ளிக் கட்டணம் மற்றும் இதர செலவு விபரங்களை  எழுதிக்கொடு", நஷ்டஈடு வழங்க அது உதவியாய் இருக்கும் என்றார்.
சந்தோசமாய் அவனும்,  முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செலுத்திய கட்டண விபரங்களைப்  பட்டியலிட்டான்.
வந்த வேலை சுலபமாய் முடிந்ததை எண்ணி மனதுக்குள் ஆனந்தமும்
அடைந்தான்.அவன் எழுதிய தாளை வாங்கிப் படித்த  தலைமை ஆசிரியர்
 குதூகலத்தில் கத்தினார் " தங்கமணி, நான் உனக்கு வைத்த கணக்குத் தேர்வில் 'நூற்றுக்கு நூறு மதிப்பெண்' வாங்கியிருக்கிறாய், ஒவ்வொரு வகுப்பிலும் கட்டிய கட்டணம் ஒன்றுவிடாமல் புத்தகம் மற்றும் இதர செலவு கணக்குகளைப் பிழையில்லாமல் துல்லியமாக எழுதியிருக்கிறாய், 
ஆகவே நாங்கள் கற்றுக் கொடுத்ததில் எந்த தவறும், குறையும் இல்லை"என்றார்.
இதைக் கேட்ட மற்ற ஆசிரியர்களும் தப்பித்தோம் என நிம்மதியடைந்தனர்.
தங்கமணி பதில் ஏதும் பேசாமல் அங்கிருந்து  நகன்றான்.
சமுதாயத்தில் நிறைய "தங்கமணிகள்" இருக்கிறார்கள். இன்றையச் சூழலில், நான் எனது குடும்பம் என்கிற எண்ணமே எல்லோரிடமும் மேலோங்கியுள்ளது.நாம் வாழும் சமுதாயம்
பற்றிய கடமையுணர்வு சிஞ்சித்தும் இல்லை.பள்ளிக்கும், கோயிலுக்கும்  பொது இடங்களுக்கும் நன்கொடையாய் கொடுக்கும் மின்சார விளக்கின் வெளிச்சமே தெரியாத அளவிற்கு
'உபயம்' என்று அவரவர்  பெயரை எழுதி விடுகிறோம்.
கொடுத்த நன்கொடைக்காக நமது பெயரைக்  கல்வெட்டுக்களில் பதிப்பது, அன்பளிப்பு என்று வழங்கும் புத்தகங்களில் பெயரை எழுதுவது..... இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம்.
தான்,தனது குடும்பம் தாண்டி சமுதாயத்திற்கும் நாம் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது.அதை நாம் மறந்து விடுகிறோம்.படிக்கும் பள்ளியாக  இருக்கலாம், கல்லூரியாக இருக்கலாம்,
பொது நூலகமாக இருக்கலாம்,பஞ்சயத்தாக இருக்கலாம்,பொது விளையாட்டுக் கூடமாக இருக்கலாம், இது போன்ற பொது அமைப்புகளிலிருந்து பலன் அடைவது எப்படி?,வாழ்வின் பெரும்பகுதி  இதற்காகவே செலவிடுகிறோம்.
வரிப்பணம் (TAX RETURN ) கணக்கு காட்டுவதில், அரசாங்கத்திடமிருந்து,
கட்டிய வரிபணத்தைத் எப்படித் திரும்பப் பெறலாம் என்பதில்தான் நமது முழு கவனமும்  உள்ளது.
எத்துனை பேர்  TAX RETURN  பதிவு பண்ணும்போது நியாயமாய்
நடந்துகொள்கிறோம்?, நமக்கு நாமே கேள்வி கேட்க வேண்டிய 
நேரமிது.எதைக் காட்டி அரசாங்கத்திடமிருந்து சலுகை பெறலாம்? இது தான் நமது சிந்தனையே?.பள்ளி,கல்லூரிகளில்  
கட்டணம் கட்டும்போது எத்துனைபேர் சந்தோசமாய் பணம் 
கட்டியிருக்கிறோம்?.
பள்ளியிலிருந்து நமது குழந்தைகள் கொண்டுவரும் நன்கொடைச் சீட்டுக்களை மதித்து பணம் வழங்கியிருக்கிறோமா?.
பலனை எதிர் பாராது, நம்மை அங்கமாக கொண்டுள்ள நாம் வாழும்
சமுதாயத்திற்குச்செய்யும் "நிஷ்காமிய கர்மமே" நம்மை உயர்த்தும். 
"ஒவ்வொருவரும் உலகில் பிறக்கிறோம். வளர்கிறோம். வாழ்கிறோம், முடிவடைகிறோம். வாழ்கிற காலத்தில் பொருட்கள் பல தேவைப்படுகின்றன. சொந்தங்கள் அவசியமாகின்றன.
ஆனால் எவரும் பிறக்கின்றபோது எதையும் கொண்டு வருவதும் இல்லை. இறக்கின்றபோதும் கொண்டு போவதும் இல்லை.
மனித சமுதாயம்தான் ஒவ்வொருவருக்கும் வாழ்வளித்து வருகின்றது. அத்தகைய சமுதாயத்திற்கு தனது அறிவாற்றல், உடலாற்றல் ஆகிய இரண்டின மூலமும் நாம் கடனாற்ற வேண்டும்.
எல்லோரும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய முறையில் கடனாற்றினால் மனித சமுதாயம் எப்போதும் வளத்துடன் இருக்கும்'' எனக் கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி.

 
அவர் சமுதாயக் கடமையுணர்வு  பற்றிக் குறிப்பிடுகையில்
''சமுதாயத்திலே நீ ஒரு பொறுப்பை ஏற்றுத் தொழில் புரிவதால் உன்னை
வளர்த்து வாழவைத்த சமுதாயத்திற்கு நீ கடனைத் தீர்க்கிறாய்.
குழந்தைகளை ஒழுக்கத்திலும், கல்வியுலும் சிறப்படையச் செய்வதும்
சமுதாயத்திற்கு ஆற்றும் ஒரு சிறந்த கடமைதான்.
ஒரு குழந்தையை நல்லவனாகக் கல்வியில் சிறந்தவனாக உருவாக்கினால் ஒரு நல்ல குடிமகனை உலகுக்கு   அளித்து உதவுகிறாய் என்பதுதான் பொருள்" என்கிறார்.


கொசுறு 1 : 

"ஒண்ணுமே தெரியாத  ஸ்டூடென்ட்கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க ...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க....
என்ன கொடுமை சார் இது?...."   

கொசுறு 2 :

டாக்டர், இந்த நோயை  ஆப்பரேஷன் இல்லாம குணப்படுத்த முடியாதா?
முடியாதுப்பா.....
ஏதாவது ஊசி கீசி போட்டு குணப்படுத்திட   முடியாதா டாக்டர்?
முடியாதுப்பா...என் பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டியே ஆகணும்.
  

Thursday, 3 January 2013

ஐவகைப் பற்று!


குரு ஒருவர் ஆசிரமம் ஒன்றை அமைத்து அதிலே ஆன்மீகப் பணி புரிந்து வந்தார்.அவரது ஆன்மீக அறிவும் அனுபவமும் பலருக்கு
வழிகாட்டுதலாய் இருந்தது.
அவரைக் காண பலதரப்பட்ட மக்கள் தினமும் வருகை தருவார்கள்.இப்படியிருக்கையில் அவரது சீடர் ஒருவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.அந்த சீடர் குருவிடம்
"குருவே. எனக்கு ஒரு விடயத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.அதுபற்றி தங்களிடம் கேட்கலாமா?" என்றார்.
"தாராளமாய் கேள்" என்றார் குரு.
"குருவே, தங்களைக் காணத் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகிறார்களே! பெரும்பாலானோர் தங்களது சொந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகிட்டும் என்ற நம்பிக்கையில்
இங்கு வருகிறார்கள்.வெகு சிலர் மட்டுமே ஆன்மீக நாட்டம் கொண்டு இங்கு வருகிறார்கள்.
அவர்களில் ஆன்மீகச் சிந்தனையிலே, நாட்டம் உள்ளவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்கிறீர்கள்?" என்று கேட்டார் சீடர்.
உனக்கு இது பற்றி எளிமையாய் விளக்குகிறேன் என்ற குரு
"நான் இப்போது சொல்லும் கேள்வியை நாளை என்னைக் காண வரும் எல்லோரிடமும் கேள்" என்றார்.
"குருவே !என்ன கேள்வி அது" என்றார் சீடர்.
"உலக அமைதி நிமித்தம், குரு பாத யாத்திரையாகக் கிராமம் கிராமமாக மாவட்டம் முழுவதும் செல்ல இருக்கிறார்.ஒவ்வொரு ஊரிலும் கூட்டுத் தவமும் அறநெறி விளக்கக் கூட்டமும்
நடத்துவார்.
ஆசிரமம் வருவதற்குச் சிறிது காலம் ஆகும். குருவுடன் செல்லத் தயாராய் இருப்பவர்கள், தங்கள் பெயர்களைக் கொடுக்கலாம்.
யார் யார் வர விரும்புகிறீர்கள்? என்று கேள்" என்றார் குரு.
மறுநாள் காலையில் ஆசிரமம் வந்து குருவைச் சந்தித்தவர்களை சீடர் தனியே அழைத்துக் குரு சொன்ன கேள்வியை ஒவ்வொருவரிடமும் கேட்டார்.
அதற்குச் சிலர், "மனைவியிடம் கேட்டுச் சொல்கிறேன்" என்றனர். சிலர் தங்களின் வேலை நிமித்தமாய் வெளியூருக்குப் போவதாகச் சொல்லியபின் அங்கிருந்து நழுவிச் சென்றனர்.சிலர் தங்களுக்கு "வயல் வேலை இருக்கிறது - அது முடிந்த பிறகு குருவுடன் வரலாம்" என்று நடையைக் கட்டினர்.சிலர் "வீட்டின் கட்டிட வேலை முடியவில்லை" என்றும் "அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காது" என்றும் கூறிவிட்டு விலகினர். இப்படி எல்லோரும் ஒவ்வொரு காரணம் சொல்லி, இடத்தை விட்டுச் சென்றனர். ஒரே ஒருவர் மட்டும்தான் தான் பாதயாத்திரைக்குக் குருவுடன் செல்லத் தயார் என்று கூறினார்.
சீடரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரைக் குருவிடம் அழைத்துச் சென்றார்.குரு அவரின் குடும்ப விவரங்களை விசாரித்தார். அவரும்,குருவிற்கு மரியாதை செலுத்திவிட்டு "நான் பொறுப்பான அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறேன்.எனக்கு மனைவி குழந்தைகள் எனக் தனிப்பட்ட கடமை இருந்தாலும், உலக அமைதி எனும் சமுதாயத் தொண்டு அதிமுக்கியம் என உணர்கிறேன்.அதற்காக முடிந்த அளவு நேரம் ஒதுக்குவதைக் கடமையாகக் கருதுகிறேன், ஆகவே நானும் பாத யாத்திரைக்கு
உங்களுடன் வரவிரும்புகிறேன்" என்றார்.
குருவும், "மிக்க மகிழ்ச்சி. உங்களை நான் எப்பொழுது அழைத்தாலும் வருவீர்கள் அல்லவா? நான் பாதயாத்திரை செல்லும் போது தங்களை அழைத்துப் போகிறேன்" என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.
குரு சீடரை அழைத்து, "உலக அமைதிக்கான பாதயாத்திரையில் கலந்துகொள்ள விருப்பமில்லாதோர் பலர், வருவேன் என்று சொன்னவர் ஒருவர் மட்டுமே.என்னிடம் வரும் மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பாதயாத்திரைக்கு வரமுடியாது என்று சொன்னவரெல்லாம் மாம்பழம் போன்றவர்கள். இன்னுமும் உலக ஆசைகளும், பற்றுக்களும் அவர்களோடு ஒட்டியுள்ளன. அவர்களை அதிலிருந்து பிரித்தெடுப்பது சற்றுக் கடினம்.மனிதரில் அதிகப்படியானோர் இந்த வகைதான். எவ்வளவுதான் அனுபவங்கள் பெற்றாலும், மீண்டும், மீண்டும் உலக ஆசைகளில் மூழ்கியே இருப்பார்கள்.தான் தனக்கு என்னும் குறுகிய எண்ணத்திலேயே வாழ்நாளைத் தொலைத்து விடுவர்.பொருள்,மக்கள் மற்றும் புகழ் மீது பற்று கொண்டு கடைசிவரை அதிலேயே திளைத்து வருந்துவர்.
பாதயாத்திரைக்கு வருகிறேன் என்று சொன்னவரோ விளாம்பழம் போன்றவர். விளாம்பழம் பழுக்கும் வரை ஓட்டோடு ஒட்டியிருக்கும்.பழமான பின்பு ஓட்டோடு சேராமல் தனித்து நிற்கும்" "பற்றை அறுக்க துணிந்தவர் அவர்" என்றார் குரு.
நாம் மாம்பழமா? விளாம்பழமா?
ஐவகைப் பற்றுக்கள் பற்றி வேதாத்திரி மகரிஷி கூறுகையில்,
"எல்லையற்ற அருட்பேராற்றலின் ஒரு பகுதியே ஒவ்வொரு மனிதனும் என்ற உண்மையினை உணர்ந்து அதனை மறவாமல் இருக்கவும், பழகிக் கொள்ளவும் வேண்டும். அகன்ற பேராற்றலை மறவாத விழிப்போடு உலக வாழ்வை நடத்தும் போதுதான், பற்றி நிற்பதிலும் பற்றின்மை என்ற தகைமை மனிதனுக்கு உண்டாகிறது.
உலக வாழ்வில் பொருள், மக்கள், பால், புகழ், செல்வாக்கு என்ற ஐவகைப் பற்று ஏற்படுவது இயல்பே. கடமையுணர்வோடும், அளவு முறை அறிந்தும், விழிப்போடு இப்பற்றுக்களை வளர்த்தும், காத்தும் கொள்ள வேண்டியது பிறவிப் பயனை எய்த அவசியமானவை. நீரில் குளிப்பது தேவை தான். ஆனால் நீரில் மூழ்கிவிடாமலும் காத்துக் கொள்ள வேண்டும். நெருப்பு வாழ்க்கைக்கு பலவகையிலும் தேவைதான். ஆனால் நெருப்பு எரித்து விடாமலும் காத்துக் கொள்ள வேண்டும்." என்று கூறுகிறார்.



கொசுறு :
பற்றற்றிரு! சாமியார் பேச்சுக்கு மயங்கினார்கள் பக்தர்கள்
அன்றைய கலெக்க்ஷன் அரைக் கோடி!