Monday, 26 November 2012

நான் ஏன் திருந்த வேண்டும்?(Self Realisation)




இள வயதிலேயே என்னை ஞானி என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் எங்கு சென்றாலும் என்னைக் காண மக்கள் கூட்டம் திரண்டது."ஞானி" அடையாளம் உலகம் முழுவதும் என்னை கொண்டு சேர்த்தது.

எனக்கு அப்போது இருபது வயது இருக்கும், உலகில் எல்லாமே தலைகீழாக நடப்பதாக எனக்குத் தோன்றியது. விட்டுக்கு வீடு சண்டை,நாட்டுக்கு நாடு சண்டை, இனத்துக்கு இனம் மோதல், மதங்களுக்குள் வேற்றுமை, மக்களுக்குள் ஒற்றுமையில்லை.


உலகம் அமைதி பெற எனக்கு வழிமுறை  தோன்றியது.எனக்கு தோன்றிய வழிமுறையில்,
சித்தாந்தத்தில்,கொள்கையில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை பிறந்தது. அதை அனைவரும் பின்பற்றினால் உலகம் அமைதிபெறும்.ஆகவே நான் நினைப்பதுபோல் இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என எண்ணினேன்.


எனது சித்தாந்தத்தைப்  பரப்புவதற்காக  இருபதாண்டு காலம் பல்வேறு நாடுகளுக்கு   பயணம் மேற்கொண்டேன், 
நாட்டு தலைவர்கள் பலரைச் சந்தித்தேன், அமைதிக்கான வழிமுறைகள் பற்றி  விவாதித்தேன்.
நான் கூறும் திட்டங்களை கையாண்டால் ஒற்றுமையுடன் வாழமுடியும் 
என்பதை விளக்கினேன்.இருபது ஆண்டுகள் கடந்தது, நிலைமையில் அணுஅளவும் மாற்றம் ஏற்படவில்லை.

உலகம் முழுதும்  மாற்றமுடியும்  என்பது அவ்வளவு எளிது அல்ல, நாட்டை மாற்றினால் என்ன?,இந்த முயற்சியில் சுமார் பதினைந்து ஆண்டுகளைச் செலவிட்டேன்,தலைவர்கள் பலரைச் சந்தித்தேன், 
அமைதிக்கான வழிமுறைகள் பற்றி  விவாதித்தேன்.பதினைந்து ஆண்டுகள் சென்றும் நாட்டில் ஒரு மாற்றமும் இல்லை.


நாடு என்பதுகூட அதிகம், நாம் இருக்கும் ஊரையாவது மாற்றலாம் என்று கஷ்டப்பட்டு பத்து ஆண்டுகள் உழைத்தேன்.
ஊர் கூட்டம் கூட்டினேன், தெருவில் நின்று பிரச்சாரம் செய்தேன், பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினேன்.
பத்து ஆண்டுகளும் சென்றது, ஒரு மாற்றமும் இல்லை.



ஊரைத்தான் மாற்றமுடியவில்லை சரி,  என் வீட்டில் உள்ளவர்களையாவது  திருத்தலாம் என்று சில வருடங்கள் முயன்றேன், என் உடன்பிறந்தோரை, எனது உறவினர்களை  ஒற்றுமையாய் அமைதியாய்  இருக்க வலியுறுத்தினேன்,  ஒன்றுமே நான் நினைத்தது போல் நடக்கவில்லை.



இப்போது நான் மரணப்படுக்கையில் எனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறேன். இப்போதுதான், முதன் முதலாக நான் என்னை மாற்றவேண்டும் என்ற உணர்வு வந்தது. அப்படி என்னை மாற்றியிருந்தால் நானும் அமைதியடந்திருப்பேன், என் குடும்பத்திலும்   அமைதியை கொண்டுவந்திருக்க  முடியும் என்பது புரிந்தது.அடுத்தவர்களை மாற்ற முயன்றேனே தவிர என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஒரு நாளும் எண்ணியதில்லை. நீங்களும் என்னை மாதிரிதானே? 


மனைவியைத்  திருத்தவேண்டும்!, கணவனுக்கு மனைவி  திருந்தினால் போதும்!, மகன் நம் சொல்லைக்  கேட்க வேண்டும்!, மகனுக்கோ,  அப்பா தான் சொல்வதைப்  புரிந்து நடந்து கொள்ள வேண்டும் - வயதானாலே இப்படிதான்!, மனவளக்கலைக்கு அவள் மட்டும்  சென்று திருந்தினால் போதும் என கணவன்(மனைவி நினைப்பாள்-கணவன் மட்டும் போனால் போதும்),
எனது மேனேஜர் திருந்தவே மாட்டார்!,
எனது ஆசிரியர் எப்பவுமே இப்படிதான்!,
பக்கத்துக்கு வீட்டு பையன் திருந்தாத வால்!,
இந்த அரசியல்வாதிகளே இப்படித்தான் அவர்களால்தான் நாட்டில் இவ்வளவு குழப்படியும்!,
அரசாங்க உத்தியோகஸ்தர்கள் திருந்துவது எப்போதோ?,
போலீஸ் என்றாலே அடாவடிதான்!,
ஜாதித் தலைவர்கள் திருந்தப்போவதில்லை!, 
மத குருமார்கள் திருந்த இனிஒரு ஜன்மம் வேண்டும்!
பத்திரிக்கைகாரர்கள் எப்பவுமே இப்படித்தான் திரித்து எழுதுகிறார்கள்!,
டிவிக்காரர்கள் திருந்த மாட்டார்களா?,
எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியே ஒழிந்தார்கள்!  
இப்படி ஒரு பெரிய பட்டியல்.
இந்த உலகமே திருந்தவேண்டும்,
நான் மட்டும் இப்படியேதான் இருப்பேன்?,அப்படித்தானே?!

வேதாத்திரி மகரிஷி ஞானக் களஞ்சியம் நூலில் "தன் குற்றம் உணர பிறர் குற்றங்களை மன்னிப்போம்" என பின் வரும் பாடலில் குறிப்பிடுகிறார்:

தன் குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்போம்!
தன குற்றம் குறை கடமைத்  தன்னுள் ஆய்ந்து
தான் கண்டு தனைத் திருத்தும் தகைமை வந்தால்
என் குற்றம் பிறர் மீது சுமத்தக் கூடும்?
ஏதேனும் கண்டாலும் மன்னித்தாலும் 
மென்மைக்கே மனம் உயரும் பிறர் தவற்றால்
மிக வருத்தம் துன்பமது வந்த போதும்
நன்மைக்கேயாம் செய்த பாவம் போச்சு
நான் கண்ட தெளிவு இது நலமே பெற்றேன்(575)


திருந்தி வாழ்வதை பின்வரும் பாடலில் கூறுகிறார்:

திருந்தி வாழ
பழக்கமே பற்றாக பாசமாக
பரிணமித்துச் சிக்கல் வாழ்விலாச்சு
இழக்கின்றோம் இயற்கைவள இன்பமெலாம்
இதையுணர்ந்து ஏற்றபடி திருந்தி வாழ்வோம்(599) 

கொசுறு:
நம்ம பரமேஷுக்கு லாட்டரி விழுந்து கொடீஸ்வரன் ஆகியும் இன்னும்  திருந்தவேயில்ல...!
எதவச்சு சொல்லுற?.
என்னிடம் ஒரு வருடம் முன் கடன் வாங்கின 50 ரூபாவ தராம  இன்னும் இழுத்தடிக்கிறான்.


இன்னொரு கொசுறு:
வித்தியாசமான கதை இருந்தால் சொல்லுங்களேன் …!

சாமியாரா வாழர ஒருத்தர் மனம்
திருந்தி நேர்மையா வாழ ஆரம்பிக்கிறார்…!

 

மேலுள்ள கதை/கட்டுரையை  ஒலி  வடிவில் கேட்டு மகிழ கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
இக்கதை/கட்டுரை ATBC யில் (Australian Tamil Broadcasting Corporation) திரு.பவராஜா அய்யா அவர்களால் நடாத்தப்படும் "சிந்தனைக் களஞ்சியம்"
எனும் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டதின் மறுபதிவே  கீழுள்ள
இணைப்பு. வானொலியில் ஒலிபரப்பப்பட்ட அதே சமயம்  கைபேசியில் ஒலிப்பதிவு செய்ததால் ஒலியின் தரத்தில் குறைகள் உண்டு, அதற்காக வருந்துகிறோம்.

 http://www.youtube.com/watch?v=RQqjzfJeESI

No comments:

Post a Comment