Tuesday, 4 December 2012

சித்து விளையாட்டு!


சாமியார் ஒருவர் நடுக்காட்டில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். கடும் பயிற்சியின் காரணமாக சில சித்து விளையாட்டுகள் அவருக்குத் தெரியும். அதனால் அவர் புகழ் நாடு முழுவதும் பரவியது.மந்திரத்தால் மாங்காய் வரவழைத்தால்தான் போதுமே.
சாமியாரைப் பார்க்க அயல் நாட்டிலிருந்து ஓர் இளைஞன் வந்தான். சாமி உங்கள் சக்தி பற்றி கேள்விப்பட்டே நான் வந்திருக்கிறேன் என்று கூறினான். சாமியார்  மிகவும் மகிழ்ந்து, அவனை அருகில் அமரச் சொல்லிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது யானை ஒன்று ஆசிரமத்தின் பக்கமாக வந்தது. அதைக் கண்ட இளைஞன்,  தங்களால், அந்த பலம் பொருந்திய யானையைக் கொல்ல முடியுமா? என்றான். இதென்ன பெரிய காரியம்? என்று சொன்ன சாமியார், கொஞ்சம் தண்ணீரை எடுத்து, மந்திரத்தை ஜெபித்து அந்த யானை இருந்த திசை நோக்கி வீசினார்.
என்ன ஆச்சரியம், அந்த வினாடியே அந்த யானை சுருண்டு விழுந்து இறந்தது! இதை ஆச்சரியத்துடன் பார்த்த இளைஞன், சாமி, உங்கள் மந்திர சக்தியைக் கண்டு பிரமிக்கிறேன் என்றான். சாமியாருக்குப் பெருமை பிடிபடவில்லை. கர்வத்துடன் அதை ஆமோதித்தார். உடனே இளைஞன், சாமி, இறந்து போன யானையை உங்களால் பிழைக்க வைக்க முடியுமா? என மறுபடியும் வினவினான். அதுவும் என்னால் முடியும். இதோ பார். என்றவாறு, மீண்டும்  கொஞ்சம் தண்ணீரை எடுத்து, ஜெபித்து யானை மேல் தெளித்தார். அந்த வினாடியே யானை உயிர் பெற்று, உற்சாகமாகத் துள்ளிக் குதித்து எழுந்தது.
இளைஞன், அந்த சாமியாரைப்  பார்த்தான். சாமி, நீங்கள் யானையை முதலில் கொன்றீர்கள். பின்னர் அதைப் பிழைக்க வைத்தீர்கள். இதனால் என்ன ஆன்மிக வளர்ச்சியை அடைந்தீர்கள்? இந்த சித்து விளையாட்டு, கடவுளை உணர  உங்களுக்கு உதவி புரியுமா? இறைவனின் அருளைப் பெற்ற ஒருவன், விலை மதிப்பில்லாத ஞானம், இறை சிந்தனை இவற்றை விட்டுவிட்டு சித்துகளைச் செய்ய ஆரம்பிப்பது தவறு இல்லையா?இறையுணர்வு வளர  இவையெல்லாம் தடை அல்லவா? என்றான்.

உங்களைபோல் கடுமையான பயிற்சியும், நேரமும், கட்டுப்பாடும் இருந்தால்  நீங்கள் செய்த சித்து வேலையை என்னாலும் செய்ய முடியும்.சிந்தனையாளர்களுக்கு சித்து வேலை சிறந்ததல்லவே!.இன்னமும் எத்தனை காலம் உங்களை நாடி வரும் அன்பர்களை பிரமிப்பூட்டுவதில் செலவு செய்ய இருகிறீர்கள்!.இது ஏமாற்று வேலைதானே!  என்றான்.
சாமியார் அதிர்ந்துபோய், அந்த இளைஞனை நிமிர்ந்து பார்த்தார்.கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்ட  சாமியார், அன்று முதல் தன் சித்து வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு ஆன்மீகப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

மகரிஷி கூறுகிறார்:

ஜால வித்தை போன்ற சித்துக்களை விளையாடும் - அவைகளைக் கற்றுக் கொள்ள விரும்பும் அன்பர்களுக்கும், இத்தகைய சித்துக்களைக் காணத் துடிக்கும் - கண்டு வியப்புற்று மதிமயங்கும் நண்பர்களுக்கும், உருக்கத்தோடு சொல்லுகிறேன். "சமூகத்திற்கு எந்தவித நன்மையும் விளைவிக்காத நஷ்டமும், கஷ்டமுமே தரும் செயல்கள் பலவற்றை 'சித்து' எனக் கொள்ளும் மயக்கத்தை விட்டு விடுங்கள்" நன்றாக ஆராயுங்கள்.

ஒரு துளி விந்துவைக் கருப்பையில் வாங்கிப் பத்தாவது மாதத்தில் எழில் மிகுந்த அற்புதச் சிற்பமான குழ்ந்தையாக்கித் தரும் தாய்மார்களின் உடலில் நடைபெறும் சித்து எத்தகையது?  ஒரு நெல்லை நூறு நெற்களாக்கித் தரும் விவசாயியின் செயல் ஒரு சித்து அல்லவா?  ஒரு பொத்தானை ஒரு இடத்தில் அமுக்கினால், எவ்வளவோ இடத்தில் எண்ணிறந்த விளக்குகள் எரிகின்றனவே இது ஒரு 'பெருஞ்சித்து' அல்லவா?  இரும்பை நகரச் செய்தும், பறக்கச் செய்தும் அதன்மூலம் கோடிக்கணக்கான மக்கள் சுலபமாகப் பல மைல் தூரத்தை எளிதாகக் கடந்து பிரயாணம் செய்யும் வசதியை ஏற்படுத்தி இருக்கிறார்களே சில தொழில் அறிஞர்கள். இது எத்தகைய சித்து?


கொசுறு :


“சூ... மந்திரக்காளி... ஒன்று... இரண்டு... மூன்று...
மந்திரக்கோலை நீட்டி  நாகேந்திரன்  சுழற்ற,
அவனது குல்லாவில் இருந்து மாங்கன்று ஒன்று
பிஞ்சுடன் தோன்றி மேடையில் ஆட...
பார்வையாளர்கள் கர ஒலி விண்ணைப் பிளந்தது.

வீடு திரும்பிய நாகேந்திரனை ஏக்கமாகப் பார்த்தாள் அவன் மனைவி...
மேடிட்டிருந்த அவள் வயிறு தடவி மெதுவாகச் சொன்னான்...
"சீசன் இல்லாததால எங்கேயும் மாங்காய் கிடைக்கலை உமா...
சாமியை வேண்டிக்கிறேன். நிச்சயம் எங்கேயாவது கிடைக்கும்.
நாளைக்கு வாங்கித் தர்றேன்... ஓ.கே...!’’

7 comments:

  1. Wonderful Stories... Keep rocking..... Sekar, Dubai

    ReplyDelete
    Replies
    1. ஐயா,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!.

      Delete
  2. Beautiful....... Cevu, Trichy

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Vanakkam,

      Thanks for your visit and comments.If time permits, pls read other stories.

      Delete
  3. NICE MESSAGE. VAZHGA VALAMUDAN.
    SRINIVASAN - KRISHNAGIRI

    ReplyDelete
  4. Thanks for your visit and comments.
    -dhinakaran chelliah

    ReplyDelete